சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்பின்னர் திருப்போரூர் எஸ்.எஸ். பாலாஜி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் தொல். திருமாவளவன் பெயரில் போலியாகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு, அதில் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் பதிவிட்டுவருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் தறுவாயில் திருமாவளவன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டுச் செயல்படும் நபர்கள் மீதும், அவற்றை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பிவரும் நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதாரத்துடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும், காவல் துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பிப். 8இல் நீட்டுக்கு எதிரான சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம்